“எஸ்பிபி மறைந்தாலும் அவரது பாடல்கள் என்றும் ஒலிக்கும்” துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல்!
பாடும் நிலா எஸ்.பி.பியின் மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி, கொரோனாவில் இருந்து மீண்டதாக வெளியான செய்தி மக்களுக்கு ஆறுதல் அளித்தது. ஆனால் நேற்று முன்தினம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக திடீர் அறிக்கை வெளியானது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், தீவிர நிமோனியா மற்றும் இதய – சுவாச மண்டல செயலிழப்பால் எஸ்.பி.பி இன்று இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது துணை முதல்வர் ஓ.பி.எஸ், எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “வைரஸ் கொடுந்தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு எஸ்.பி பாலசுப்ரமணியம் அபாய கட்டத்தை தாண்டி முன்னேற்றம் பெற்று வருகிறார் என்ற தகவலை கேட்டு அவர் நலம் பெற்று மீண்டு வருவார் என நம்பிக்கையுடன் இருந்த நேரத்தில், அவர் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பரிதவிக்கின்றனர். திரு எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் திரையிசை உலகில் ஒரு சகாப்தமாக விளங்கினார். தனது இன்னிசை தேன் குரலால் லட்சக்கணக்கான இசை ரசிகர்களை மட்டுமல்ல அவரது பாடலை கேட்கும் அனைவரையும் ஈர்த்து தன் வசமாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவராக திகழ்ந்தார்.
பாடலுக்கு என்றே பிறந்தவர் திரு எஸ்பிபி என்று சொல்லுமளவிற்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்தவர்.தமிழ் மொழியில் மட்டுமின்றி மொத்தம் நான்கு மொழிகளில் பாடல்கள் பாடி தேசிய விருது பெற்ற ஒரே பாடகர் என்ற பெருமைக்குரியவர் திரு எஸ்பிபி. ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடி ஒளிப்பதிவு செய்த சாதனை சின்னமாக பெரிய அவர் திகழ்ந்தார்.
பத்மஸ்ரீ பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு புகழ்மிகு விருதுகளை பெற்ற திரு எஸ்பிபி அவர்கள் பாடல்கள் பாடுவது மட்டுமின்றி நடிப்பிலும் தனி முத்திரை பதித்தவர் 72 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். திரு எஸ்பிபி அவர்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையிசை உலகில் கோலோச்சியவர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சி தலைவி மான்புமிகு அம்ம ஆகியோரது அன்பை பற்றி அவர்கள் நடித்த படங்களில் சிறப்பான பாடல்களை பாடியவர். தனது அற்புத குரல் வளத்தால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் ஈர்த்து இந்திய அளவில் எண்ணிலடங்கா இசை ரசிகர்களின் மனதைக் கொண்டவர்.
அன்னாரது மறைவு நமக்கெல்லாம் சொல்லொணாத் துயரத்தை அளித்திருக்கிறது. எஸ்பிபி அவர்கள் மறைந்தாலும் கொண்டு அவர் பாடிய பாடல்கள் என்றுமே மறையாது. ஒலித்துக்கொண்டே இருக்கும் அவரது பெருமையை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். அவரை இழந்து வாடும் தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி இதுவரை தாங்கிக் கொள்ளும் மன வலிமையை பெற இறைவனிடம் வேண்டுகிறேன். திரு எஸ்பிபி அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை இறைஞ்சி பிரார்த்திக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.