58 % பெண்களுக்கு ஆன்லைன் தொந்தரவு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சர்வதேச அளவில், 58 சதவீத இளம்பெண்கள், ஆன்லைன் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, பிரிட்டனை சேர்ந்த மனிதநேய அமைப்பு ஒன்று, 22 நாடுகளில் ”உலக பெண்களின் நிலை” என்ற பெயரில் ஆய்வை மேற்கொண்டது. இதில் இந்தியா, அமேரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட 22 நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனனர். இதில், சமூக வலைதளங்களில் ஏதாவது ஒருவகையில் தாங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக 58 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உடல் மற்றும் பாலியல் ரீதியாக துன்புறத்தல் அல்லது அவதூறான மொழிகளில் அவமானப்படுத்தப்பட்டதாக 47 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்த பெண்களில் பெரும்பாலானோர், சாதி காரணமாக அடையாளப்படுத்தப்பட்டு துன்புறத்தலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், முன்னாள் அல்லது தற்போதைய காதலனால் ஆன்லைனில் கேலி கிண்டலுக்கு ஆளானதாக 11 சதவீத பெண்களும், நண்பர்களால் என 21 சதவீத பெண்களும், பள்ளி அல்லது பணியிடங்களில் இத்தகைய ஆன்லைன் தொந்தரவு அரங்கேறுவதாக 23 சதவீத பெண்களும் தெரிவித்துள்ளனர்.
முன்பின் தெரியாதவர்களால் ஆன்லைன் தொந்தரவுக்குள்ளனாதாக 6 சதவீத பெண்களும், யாரென்றே அடையாளம் காண முடியாத ஆன்லைன் பயனர்களின் மூலம் தொந்தரவுக்கு உள்ளானதாக 32 சதவீத பெண்களும் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய ஆன்லைன் தொந்தரவுகளால், மன அழுத்தத்திற்கு உள்ளானதாக 42 சதவீத பெண்கள் தெரிவித்துள்ள நிலையில், பெரும்பாலானோர், தன்னம்பிக்கை குறைந்து, சுய மதிப்பு என்பதே இல்லாதது போல வருந்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
- எஸ். முத்துக்குமார்