ஆளுநரின் முடிவு வரும் வரை MBBS கலந்தாய்வு கிடையாது : தமிழக அரசு உறுதி
மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநரின் முடிவு வரும் வரை கலந்தாய்வு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, அண்மையில் நிறைவேற்றப்பட்டது. நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்து முடிந்த நிலையில், ஒதுக்கீடு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவிக்கும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை பற்றிய விவரத்தை அரசு எப்போது வெளியிடும் என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநரின் முடிவு வரும் வரையில் கலந்தாய்வு நடத்தப்படாது என உறுதியுடன் தெரிவித்துள்ளது.