மீண்டும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல்!

 

மீண்டும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல்!

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி அதிதீவிரப் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து, புறநகர் ரயில் சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

மீண்டும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல்!

இந்நிலையில் புயலின் தற்போதைய நகர்வு குறித்த தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கடலூரிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 320 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுவையில் இருந்து தென்கிழக்கு திசையில் 350 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த ஆறு மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும் அதற்குப் பிறகு அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரும் அதற்கு பிறகு வட மேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து 25ஆம் தேதி இரவு மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும்போது 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் சமயங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.