“நிரவ் மோடியை நாடு கடத்தினால் தற்கொலை செய்துகொள்வார்”
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடி செய்தவர் வைர வியாபாரி நிரவ் மோடி. அவர் செய்த குற்றம் கண்டுபிடித்த உடன் அவர் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றார். இந்தியா எவ்வளவு முயற்சித்தும் இரு வருடங்களாக அவரைப் பிடிக்க முடியவில்லை. இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டு காவல் துறை நிரவ் மோடியை 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிரடியாகக் கைதுசெய்தது.
இதையடுத்து அவரைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு சிபிஐயும் அமலாக்கத் துறையும் இங்கிலாந்திடம் வலியுறுத்திவந்தன. இதனிடையே நிரவ் மோடி ஒப்படைப்பு தொடர்பான வழக்கு லண்டன் வெட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. கிட்டத்தட்ட 2 வருடங்கள் நடைபெற்றுவந்த இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாமல் இருந்துவந்தது. நிரவ் மோடி தனக்கெதிரான வழக்கை எதிர்கொள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே ஒப்படைப்பு வழக்கில் வெளியான தீர்ப்பையும் தனது உடல்நலத்தையும் ஆயுதமாகப் பயன்படுத்தினார்.
அந்த தீர்ப்பின்படி சொந்த நாட்டின் அடக்குமுறைக்கு அஞ்சி சம்பந்தப்பட்டவர் தற்கொலை செய்யும் ஆபத்து இருந்தால் அவரை ஒப்படைப்பிலிருந்து தடுக்கலாம் என்ற இங்கிலாந்து ஒப்படைப்பு சட்டம் ஜூலியனுக்குப் பயன்படுத்தப்பட்டது. இதனால் இந்திய தரப்புக்கு நம்பகத்தன்மையை நிரூபிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதேசமயம் நிரவ் மோடியின் பாதுகாப்பு குறித்த அனுசரணையும் அவர் இந்தியாவிடமிருந்து தப்பிக்க மற்றொரு காரணமாக இருந்தது. வழக்கின் தீவிரத்தன்மையை உணர்ந்து இந்திய தரப்பில் நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டன.
விசாரணைக்கு நடுவே சாட்சியங்களை அழித்தல், சாட்சிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய வழக்குகளும் பதியப்பட்டன. இதையும் வெட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐ சமர்பித்தது. இரு தரப்பு வாதங்களையும் முழுவதுமாகப் பதிந்துகொண்ட நீதிபதி சாமுவேல் கூஸ் பிப்ரவரி 25ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதன்படி நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து அரசுக்கு உத்தரவிட்டார். மேலும் மோடியின் உடல் மற்றும் மனநலத்தைக் கருத்தில் கொண்டு அவர் மிகவும் பாதுகாப்பான சிறையில் அடைக்கப்படுவார் என்ற இந்தியாவின் வாதம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவித்த நீதிபதி மகாரஷ்டிராவிலுள்ள பராக் 12 சிறையில் அடைக்கலாம் என்றார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, நிரவ் மோடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிரவ் மோடி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் மும்பை சிறையில் அடைக்கப்பட்டால் அங்கு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் மனநல நிபுணர் சான்றிதழ் கொடுத்திருப்பதாகக் கூறினார். அவரை அடைக்க திட்டமிட்டுள்ள மும்பை சிறையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், அவரை நாடு கடத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.