குமரி அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுமாப்பிள்ளை பலி!
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் தக்கலை அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள மேலகுட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (36). கூலி தொழிலாளி. இவருக்கு, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெகதீஷ், அதற்காக நாட்டு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இதில் நோய் குணமடையாத நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜெகதீசின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது, ஜெகதீசுக்கு மஞ்சள் காமாலை மட்டுமின்றி நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தமும் அதிகளவில் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவரை குமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தினர்.
அதன் பேரில், நேற்று உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஜெகதீஷை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். திருமணமான ஒரு வாரத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.