மரத்தின் மீது கார் மோதி விபத்து – புது மாப்பிள்ளை பலி!
தென்காசி
தென்காசி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் வெள்ளாங்குளம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மகேஷ்குமார் (25). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மகேஷ்குமார், அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் கனகராஜ் (27), மணிகண்டன் ஆகியோருடன் காரில் திருவேங்கடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வீட்டில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தறிகெட்டு ஓடியது. அப்போது, சாலையில் நடந்து சென்ற சின்னகாளம்பட்டியை சேர்ந்த கனகராஜ் என்பவர் மீது இடித்துவிட்டு, அருகில் இருந்த மரத்தில் மோதியது. இதில் காரில் இருந்த மகேஷ்குமார் உள்ளிட்ட 3 பேரும், சாலையில் நடந்துசென்ற கனராஜும் படுகாயமடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகேஷ்குமார்,பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.