மின்சாரத்தை ஆஃப் செய்யாத அலட்சியம்; மின் ஊழியர் இருவர் பரிதாப பலி!
பணியின் போது மின்சாரம் தாக்கி மின்சார ஊழியர் மற்றும் அவரின் உதவியாளர் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் அங்கு மின்சாரம் தடைபட்டது. உயர் மின்னழுத்த கம்பி பழுதானதால் அங்கு மின்சாரம் தடைப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதனை சரி செய்ய மின் வாரிய ஊழியர் பாக்கியநாதன் மற்றும் அவரது உதவியாளர் தயாளன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். உதவியாளர் தயாளன் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். ஊழியர்கள் இருவரும் மின்கம்பியை சரி செய்ய முற்படும்போது அங்கே துணை மின் நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. அதனால் அங்கே மின்சாரம் தொடர்ந்து ஓட்டத்திலேயே இருந்துள்ளது.
அதே சமயம் அங்கு இருந்த வயல்வெளியில் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இரவு நேரம் என்பதால் மின் ஊழியர்கள் இருவரும் போதிய வெளிச்சமில்லாமல் அங்கு சென்று சரி செய்ய முற்பட்டபோது வயல்வெளியில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மின் பழுதை நீக்க வந்த ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.