நீட் தேர்வு முறைகேடு ; இடைத்தரகராக செயல்பட்ட நபர் சென்னையில் கைது

 

நீட் தேர்வு முறைகேடு ; இடைத்தரகராக செயல்பட்ட நபர் சென்னையில் கைது

சென்னை

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்த திருச்சியை சேர்ந்த இடைத்தரகர் சென்னையில் இன்று கைதுசெய்யப்பட்டார்.

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியாக, மாணவர் உதித் சூரிய உள்ளிட்ட 17 பேரை சென்னை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட கேரளாவை சேர்ந்த ரஷீத் என்பவர் கடந்த மாதம் தேனி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரிடம் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருச்சியை சேர்ந்த மோகன் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டது தெரியவந்தது. இதனிடையே வழக்கில் தேடப்படுவதை அறிந்த மோகன் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றார். இதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி போலீசார் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

நீட் தேர்வு முறைகேடு ; இடைத்தரகராக செயல்பட்ட நபர் சென்னையில் கைது

இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து இன்று காலை சென்னைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களின் பாஸ்போர்ட்களை குடியுரிமைத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருச்சியை சேர்ந்த பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, அவர் சிபிசிஐடி போலீசாரால் தேடப்படும் மோகன் என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து, அவரை மடக்கிப்பிடித்த அதிகாரிகள், இதுகுறித்து சென்னை சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், விமான நிலையத்திற்கு வந்த சிபிசிஐடி அதிகாரிகள் மோகனை கைதுசெய்து, அழைத்துச்சென்றனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மோகனின் மகன் தருண் என்பவர் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.