“அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” – அமித் ஷா கவலை
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் செயல்பட்டு வரும் ஜாகிர் உசேன் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய டேங்கர் லாரி வந்தது. அந்த லாரியிலிருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் மாற்றப்பட்ட போது, வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெருத்த அதிர்வலையை இச்சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அமைச்சர் சகன் புஜ்பால் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அவரது ட்வீட்டில், “நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிந்த விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் வேதனை அடைகிறேன். இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் ஈடுசெய்ய முடியாத இழப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற அனைத்து நோயாளிகளும் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.