சீர்காழி அருகே இளைஞர் மர்ம மரணம்… விசாரணையில் கம்பத்தில் கட்டிவைத்து, அடித்துக் கொன்றது அம்பலம்!

 

சீர்காழி அருகே இளைஞர் மர்ம மரணம்… விசாரணையில் கம்பத்தில் கட்டிவைத்து, அடித்துக் கொன்றது அம்பலம்!

மயிலாடுதுறை

சீர்காழி அருகே இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்துக் கொன்றதாக மூவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள தொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (26). கூலி தொழிலாளி. இவர் கடந்த செப். 5ஆம் தேதி அங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவில் உடலில் படுகாயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இந்த நிலையில், அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை மீட்டு, இறுதிச்சடங்கு நடந்த முயன்றனர். இதுகுறித்து தொடுவாய் கிராம நிர்வாக அலுவலர் மோகன கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், சீர்காழி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சீர்காழி அருகே இளைஞர் மர்ம மரணம்… விசாரணையில் கம்பத்தில் கட்டிவைத்து, அடித்துக் கொன்றது அம்பலம்!

மேலும், இந்த சம்பவம் குறித்து, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, சீர்காழி மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளர் கவிதா தலைமையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் முருகனை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதில், அவர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. சம்பவத்தன்று முருகன் அதே கிராமத்தை சேர்ந்த மதியழகன் என்பவரது வீட்டிற்குள் புகுந்துள்ளார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த சிலர் முருகனை பிடித்து, மின்கம்பத்தில் கட்டிவைத்து கம்பால் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து, முன்னதாக சந்தேக மரணம் என பதிவுசெய்த வழக்கினை, கொலை வழக்காக மாற்றிய போலீசார், முருகனை தாக்கி கொன்றதாக தொடுவாய் கிராமத்தை சேர்ந்த கவியரசன், வெள்ளரீசன் மற்றும் மதுரை வீரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 1 பெண் உள்பட 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.