‘கணவருடன் தகராறு’ குழந்தைகளுக்கு அரளி விதை கொடுத்து விட்டு தாய் தற்கொலை!
குளித்தலை அருகே கணவனுடன் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கும் வீரியம்பாளையம் ஊராட்சியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருந்தனர். நேற்று இரவு முத்துலட்சுமிக்கும் செந்தில்குமாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். 8 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளுக்கும் அரளி விதை கலந்த தண்ணியை கொடுத்துள்ளார்.
பின்னர் தண்ணீர் பிடிக்க வெளியே வந்த முத்துலட்சுமி மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அவரிடம் விசாரித்ததில் தான் அரளி விதை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து பொதுமக்கள் உடனே அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையிலும், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது குழந்தைகள் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முத்துலட்சுமி தற்கொலைக்கான காரணம் குறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.