”பணம் பாதுகாப்பாக உள்ளது – பேடிஎம் அறிவிப்பு !”
பேடிஎம் பணப் பரிமாற்ற செயலியை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கிய நிலையில், வாடிக்கையாளர்களின் பணம் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது எனவும், பயப்படாமல் தொடர்ந்து வழக்கம்போல பேடிஎம்மை பயன்படுத்தலாம் என்றும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் பரிமாற்ற சேவையில் முன்னணி நிறுவனமான பேடிஎம்-க்கு இந்தியாவில் 5 கோடி பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த நிலையில் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி நீக்கப்பட்டதால், நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
பிளே ஸ்டோர் விதிகளை மீறி பேடிஎம் தொடர்ந்து செயல்பட்டதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூகுள் தெரிவித்திருந்தது. பிளே ஸ்டோரின் விதிகளுக்கு புறம்பாக, ஆன்லைன் விளையாட்டு சூதாட்டத்தை ஊக்கப்படுத்தும் விதமாக தொடர்ந்து செயல்பட்டதால் இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, டிவிட்டரில் கருத்து தெரிவித்த பேடிஎம் நிறுவனம், பிளே ஸ்டோரில் புதிய டவுன்லோட் மற்றும் அப்டேட்களுக்கு பேடிஎம் செயலி தற்காலிகமாக இருக்காது என்றும் விரைவில் பிளே ஸ்டோரில் கிடைக்கும் என்றும் தெரிவித்தது.
Dear Paytm’ers,
— Paytm (@Paytm) September 18, 2020
Paytm Android app is temporarily unavailable on Google’s Play Store for new downloads or updates. It will be back very soon.
All your money is completely safe, and you can continue to enjoy your Paytm app as normal.
எனினும் மக்களிடம் பதட்டம் நீடிக்கும் நிலையில், இது குறித்து மீண்டும் டிவிட்டர் பதிவிட்டுள்ள பேடிஎம், கூகுள் ப்ளே ஸ்டோரில் பேடிஎம் செயலியை மீண்டும் தரவிறக்கம் செய்வதற்கான வேலைகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது.
பயனர்களின் அனைத்து தகவல்களும் பாதுகாப்பாக உள்ளன என்றும், பேடிஎம் செயலி மூலமான வங்கிக் கணக்குகளில் தொகைகள் 100 சதவீதம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள செயலி மூலம் வழக்கமான அனைத்து சேவைகளும் கிடைக்கும் எனவும் பேடிஎம் கூறியுள்ளது.
- எஸ். முத்துக்குமார்