அமைச்சர்களை பன்றிக்குட்டிகள் என விமர்சித்த ஸ்டாலின்

 

அமைச்சர்களை பன்றிக்குட்டிகள் என விமர்சித்த ஸ்டாலின்

மொழிப்போர் தியாகிகள் நினைவாக திருவொற்றியூரில் நடைபெறும் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய முக ஸ்டாலின், “மொழிப் போர்த் தியாகிகள் நம்மோடு வாழ்கிறார்கள், திருச்சி கீழப்பளூர் சின்னச்சாமி தான் முதல் மொழிப்போர்த் தியாகி. மொழிப்போர்த் தியாகிகள் அனைவருமே திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நமக்குப் பெருமை. 1963 முதல் 65 வரையில் திமுக கழகத்திற்கு மிகவும் கொந்தளிப்பான காலமாக இருந்தது. மொழித்தியாக சீலர்களால் தான் 67 ல் நாம் ஆட்சிப் பொறுப்பேற்றோம். சிவகங்கையை சேர்ந்த ராஜேந்திரன் என்ற மாணவர் அண்ணாமலை பல்கலை மாணவர்களை ஒன்று திரட்டி போராடினார். அன்றைய முதல்வர் பக்தவச்சலம் உத்தரவின் பேரில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தி ஒழிக! தமிழ் வாழ்க என்று முழங்கி உயிர் நீத்தார் ராஜேந்திரன். நான் இத்தியாகிகளை நினைத்துப் பார்க்கிறேன்.

அமைச்சர்களை பன்றிக்குட்டிகள் என விமர்சித்த ஸ்டாலின்

ஆளுங்கட்சி செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் கோவிட் காலத்தில் திமுக செய்தது. கொரோனாவை பயன்படுத்தி கொள்ளையடித்தது பழனிசாமி தலைமையிலான ஆட்சி. கோவிட் தொற்றை கண்டறியும் கருவி, மாஸ்க், பிளீச்சிங் பவுடர், வெக்கத்தை விட்டு சொல்கிறேன்… விளக்குமாற்றில் கொள்ளையடித்த ஆட்சி இந்த ஆட்சி. 4 மாதம் தானே இருப்போம் அதற்குள் கிடைப்பதையெல்லாம் கொள்ளையடித்துவிடலாம் என கொள்ளையடிக்கின்றனர். திமுக ஆட்சி வந்ததும் இதற்கெல்லாம் தண்டனை வழங்கப்படும். அம்மா ஆட்சி என ஒருநாளைக்கு 500 முறை சொல்கிறீர்கள். இதுவரை அந்தம்மா மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து சொன்னீர்களா? எந்த முகத்தை வைத்துக் கொண்டு நினைவிடம் திறக்கப் போகிறீர்கள்? ஜெ.விற்கு என்ன உடல்நலக்குறைவு ? என்ன சிகிச்சை வழங்கப்பட்டது ? எந்த மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்? என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை. நம் கொள்கை எதிரியாக இருந்தாலும் அவர் நமக்கும் முதல்வராக இருந்தவர். அவர் எப்படி இறந்தார் என சொல்ல வேண்டாமா? அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இருந்த போது அவர்களின் உடல்நிலை குறித்து அமைச்சர்களால் தினமும் மக்களுக்கு விளக்கப்பட்டது.

ஜெ. மருத்துவமனையில் இருந்த போது குட்கா புகழ் விஜய பாஸ்கர் என்ன செய்தார்? ஏன் அவர் உடல்நிலை குறித்து விஜய பாஸ்கர் விளக்கவில்லை. ஊர்ந்து வந்தவர் என்று சொன்னால் முதல்வருக்கு கோபம் வரும்… சசிகலா சிறைக்கு போக வேண்டியிருந்ததால் ஊர்ந்து வந்தவரை முதல்வராக்கினார். கலைஞரை விமர்சனம் செய்கிறாரே நீ ஊர்ந்தியா இல்லையா? தவழ்ந்தியா இல்லையா? ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம். முதல்வர் முதல் கடைக்குட்டி அமைச்சர் வரை அப்பட்டியலில் உள்ளனரே. உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு வாருங்கள். நேருக்கு நேர் விவாதிப்போம். நீங்கள் அழைக்கும் இடத்திற்கு நான் வருகிறேன். ஆறுமுக சாமி ஆணையம் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. 10 முறை ஓபிஎஸ்க்கு ஆணையம் சம்மன் அனுப்பிவிட்டது. தெம்பிருந்தால் ஆஜராகலாமே? ஏன் ஆஜராகவில்லை?. கலைஞர், ஜெ இருந்தவரையில் நீட் தமிழகத்திற்கு வரவில். தமிழகத்தில் நீட்டிற்கு விலக்கு கட்டாயம் வழங்கப்படும்.

கொளத்தூரிலேயே நான் மனு வாங்கவில்லையாம். ஒரு அமைச்சர் சொல்கிறார்.பன்றிக்குட்டிகளை நான் கேவலப்படுத்த விரும்பவில்லை. தைரியமிருந்தால் கொளத்தூர் வந்து பாருங்கள். ராயபுரத்தில் நின்று ஜெயிக்க ஸ்டாலின் தேவையில்லை. திமுக தொண்டர் ஒருவர் போதும்” என விமர்சித்தார்,