“புருஷன் ஊருக்கு போயிருக்காருன்னு கவலை படாதீங்க”… திண்டுக்கல் சீனிவாசனின் உளறல்!
வருகிற சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் 2வது முறையாக திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். திண்டுக்கல் சீனிவாசன் கடந்த 13 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் நேற்று திண்டுக்கல் குமரன் நகரில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ” இல்லத்தரசிகளே கலைப்படாதீர்கள். புருஷன் வெளியூர் போனாலும் கவலையில்லை. மீண்டும் அதிமுக அரசு வந்தால் உங்கள் வங்கி கணக்குக்கு 1,500 ரூபாய் ஒன்றாம் தேதியானால் வந்துவிடும். உங்கள் பிள்ளைகளின் கல்வி கடனும் தள்ளுபடி செய்யப்படும்” என்றார்.
தொடர்ந்து பேச ஆரம்பித்த அவர் வழக்கம் போல உளற ஆரம்பித்து விட்டார். அதாவது அதிமுகவின் தேர்தல் அறிக்கைப்படி நகர அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கு பாதி கட்டணம் என்பதை மாற்றி திண்டுக்கல் – பழனி இடையே எக்ஸ்பிரஸ் பேருந்தில் பெண்களுக்கு கட்டணம் குறைக்கப்படும் என்று தவறாக புரிந்துகொண்டு பேசினார். அதேபோல் சோலார் அடுப்பு குறித்து பேசும் போது, பெட்ரோல் ஊற்றாமல் அடுப்பை பயன்படுத்தலாம் என்றார். திண்டுக்கல் சீனிவாசனை பொறுத்தவரையில் இதுபோன்ற உளறலும், சர்ச்சையும் புதிதானது அல்ல. கடந்த 2019-ம் ஆண்டு பாடகி சுதா ரகுநாதனை பரதநாட்டியக் கலைஞர் என்று கூறிய திண்டுக்கல் சீனிவாசன், பிரதமர் மோடியின் பேரன் ராகுல்காந்தி என்றும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமகவின் மாம்பழம் சின்னத்துக்கு பதில் ஆப்பிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறியதும் கவனிக்கத்தக்கது.