தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு… உறுதிப்படுத்திய அரசு – எந்தெந்த பகுதிகளில் அமல்?
வரலாறு திரும்புகிறது என்று சொல்லும் காலம் போய் கொரோனா திரும்புகிறது என்று சொல்லும் காலம் வந்துவிட்டது. மற்ற நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோனா பரவிக்கொண்டிருக்க இந்தியாவிலோ இரட்டை உருமாற்றம் அடைந்த கொரோனா பரவிவருகிறது என மத்திய சுகாதாரத் துறை ஷாக் தகவல்களைக் கூறியுள்ளது.
இந்த புதிய உருமாற்ற வைரஸ் குறைந்தது 18 மாநிலங்களில் பரவியிருக்கலாம் என்பதை அணுமானமாகக் கூறுகிறது. முக்கியமாக மற்றொரு விஷயத்தையும் மத்திய அரசு தெரிவித்தது. அந்தந்த மாநிலங்களில் உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்துவதை அம்மாநில அரசுகளே பரிசீலிக்க அனுமதியளிப்பதாகக் கூறியது. இதனால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது தமிழ்நாட்டிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. தேர்தலுக்குப் பின் ஊரடங்கு போடப்படும் என்ற யூகங்களும் சொல்லப்படுகின்றன.
இதுதொடர்பாகப் பதிலளித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, குறிப்பிட்ட தெரு, வீடு என அந்தந்த பகுதிகளில் மட்டும் ஊரடங்கை செயல்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. முழு ஊரடங்கு என்று யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். மக்கள் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக இருப்பதால் தான் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதோடு, தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.