வருவாய் அதிகரித்தும் லாபத்தில் சரிவு.. மைண்ட்ரீ லாபம் ரூ.317 கோடியாக குறைந்தது
2021 மார்ச் காலாண்டில் மைண்ட்ரீ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.317.3 கோடி ஈட்டியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த மைண்ட்ரீ நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் மைண்ட்ரீ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.317.3 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 2.8 சதவீதம் குறைவாகும். 2021 மார்ச் காலாண்டில் மைண்ட்ரீ நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.2,109.3 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 4.2 சதவீதம் அதிகமாகும்.
2020-21ம் நிதியாண்டில் (2020 ஏப்ரல்-2021 மார்ச்) மைண்ட்ரீ நிறுவனத்தின் லாபம் 76 சதவீதம் உயர்ந்து ரூ.1,110.50 கோடியாக உயர்ந்துள்ளது. இதே நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 2.6 சதவீதம் அதிகரித்து ரூ.7,967.8 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் ஆர்டர் புத்தகம் 12.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
மைண்ட்ரீ நிறுவனம் 2020-21ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.17.50 இறுதி டிவிடெண்டாக வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, மைண்ட்ரீ நிறுவனத்தின் பங்கு விலை 0.17 சதவீதம் உயர்ந்து ரூ.2,067.60ஆக உயர்ந்தது.