சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் பலியான மில் தொழிலாளி : முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!
மழையினால் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் செல்வகுமார் என்பவர் உயிரிழந்ததற்கு முதல்வர் பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே இயங்கி வரும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் கனமழை காரணமாக நேற்றிரவு இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவர் அருகிலேயே வீடுகள் இருந்ததால் செல்வகுமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் உறங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி ராசாத்தி மற்றும் அவரது ஐந்து குழந்தைகளும் இடிபாடுகளில் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் செல்வகுமாரின் உடலை சடலமாக மீட்டனர். அத்துடன் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக செல்வகுமாரின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுற்று சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த செல்வகுமாரின் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். அத்துடன் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , செல்வகுமார் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.