மணமகனுக்கு கொரோனா…கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டதால் சோகத்தில் காதல் ஜோடி!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுதியுள்ளன. இருப்பினும் கொரோனா கட்டுக்குள் வராததால், கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கொரோனாவால் பல திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், நிச்சயிக்கப்பட்டிருந்த பல திருமணங்கள் குடும்பங்களின் முன்னிலையில் நடந்து முடிந்தது. இவ்வாறு புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோனா வைரஸ். இந்நிலையில் கடைசி நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஒரு திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த 29 நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாமல் இருந்த நிலையில், ஒரு தம்பதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதற்காக மணமகன் உட்பட 5 பேர் டெல்லியில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யபபட்டதில் 5 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் 5 பேரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நிச்சயிக்கப் பட்டிருந்த திருமணம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.