“இரவு நேர ஊரடங்கு ஒரு யானையை அலங்கரித்து தெருவில் அழைத்து வருவதுபோல”
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்றும் அப்போது தனியார்/ பொது போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப் படாது என்றும் அறிவித்துள்ளார். அதேபோல் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவையின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளில் முழு நேர ஊரடங்கு குறித்து எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் எழுதியுள்ள கவிதையில்,
எல்லோரும் கேட்கிறார்கள்:
‘நான்தான் இரவில்
நடமாடுவதில்லையே
பிறகு ஏன்
இரவு நேர் ஊரடங்கு? ‘
இன்னும் சிலர் கேட்கிறார்கள்;
‘நான் ஞாயிற்றுக்கிழமை
வீட்டை விட்டு
எங்கும் செல்வதில்லையே
பிறகு ஏன்
விடுமுறை நாள் ஊரடங்கு?’
இதென்ன கேலிக்கூத்து என
சிரிக்கிறீர்கள்
சிரிக்காதீர்கள்
அவர்கள் உங்களை
தந்திரமாக தயார்படுத்துகிறார்கள்
ஒரு வளர்ப்புப்பிராணியை
பழக்கப்படுத்துவதுபோல
பழக்கப்படுத்துகிறார்கள்
உங்களை ஒரு நாளில்
திடீரென தண்ணீருக்குள்
அமிழ்த்தினால் பயந்துவிடுவீர்கள்
கொஞ்சம் கொஞ்சமாக
குளிர்ந்த நீரை தொட்டுப்பார்த்து
பழகவேண்டும்
நீங்கள்
உங்கள் அறையில்
தூங்கிக்கொண்டிருக்கும் இரவில்
நீங்கள் அரசாங்க உத்தரவின்பேரில்தான்
தூங்குகிறீர்கள் என
உங்களை நம்பவைத்துவிட்டால்
மறுநாள் பகலில் தூங்குமாறு
அரசு உத்தரவிடும்போது
நீங்கள் அதை
ஒரு இயல்பான நடவடிக்கையின்
தொடர்ச்சியாகக் காண்பீர்கள்
விடுமுறை நாளில்
உங்களை வேலைக்குப்போகவேண்டாம்
என்று சொல்லிவிட்டால்
அன்றைக்கு அது உங்களுக்கு
பெரிய பிரச்சினையாக இருக்காது
வேலைக்குப்போகவேண்டிய
அடுத்த நாள் நீங்கள்
உத்தரவிடப்பட்ட விடுமுறைக்கு
தயாராகிவிடுவீர்கள்
இரவு நேர ஊரடங்கு
ஒரு யானையை அலங்கரித்து
தெருவில் அழைத்துவருவதுபோல
அது நிதானமாக
எல்லோரையும் ஆசிர்வதித்தபடி
மெல்ல நடந்துவந்துகொண்டிருக்கிறது
யானைக்கு மதம் பிடிக்க
இன்னும் சில தினங்களே இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.