காட்டுக்குள் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் : விசாரணை தீவிரம்!

 

காட்டுக்குள் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் : விசாரணை தீவிரம்!

மேட்டுப்பாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறை கிராம நிர்வாக அலுவலர், நேற்று இரவு காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கல்லாறு சோதனைச்சாவடி அருகே உள்ள வனப்பகுதியில் இருப்பதாக தகவல் கொடுத்திருக்கிறார். அந்த தகவலின் பேரில் வனப்பகுதிக்கு சென்ற போலீசார், ஒரு கால் தவிர்த்து உடல் முழுவதும் தீயில் கருகி கிடந்த ஒரு ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காட்டுக்குள் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் : விசாரணை தீவிரம்!

இதனை சந்தேக மரணமாக பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வனப்பகுதியில் சடலமாக கிடந்த அந்த நபர் யார்? அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் இது தொடர்பான விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த அந்த நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.