“மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயல்பாட்டை அபகரிக்கும் திமுக” : உதயநிதியை சாடும் மய்யம் நிர்வாகி!

 

“மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயல்பாட்டை அபகரிக்கும் திமுக” : உதயநிதியை சாடும் மய்யம் நிர்வாகி!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “அரியலூர் இளைஞரணி து.அமைப்பாளர் கார்த்திக்கின் சகோதரர் வினோத் அவர்கள் ஸ்காட்லாந்தில் பணிபுரிந்த நிலையில் கடந்த 23ம்தேதி அங்கு அகால மரணமடைந்தார். கொரோனா நெருக்கடியில் அவரின் உடலை தமிழகம் கொண்டுவர உதவிய தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி மற்றும்
மா.செயலாளர் சிவசங்கர் இருவருக்கும் இளைஞரணி சார்பில் நன்றி” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி செயலாளரும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவருமான பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. வினோத் ராஜேந்திரன் அவர்கள் கடந்த மே-23ம் தேதி ஸ்காட்லாந்தில் அகால மரணமடைந்துள்ளார்.

கொரோனா பேரிடர் காலமான தற்போது விமான சேவையில் சிக்கல் நீடித்ததால் அவரது உடலை உடனடியாக இந்தியா கொண்டு வர முடியாததால் ஸ்காட்லாந்தில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் நண்பர்கள் அங்குள்ள தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி திரு. வினோத் ராஜேந்திரன் அவர்களின் உடலை இந்தியா கொண்டு செல்ல கோரிக்கை முன் வைத்தனர்.

மேலும் அதற்கான பணிகளை முன்னெடுத்ததோடு நில்லாமல் மரணமடைந்தவரின் மனைவி, மகள் தாயகம் திரும்ப தேவையான நிதி உதவியை செய்யும் பொருட்டு திரு. விமல், திரு. லாரன்ஸ், திரு. பத்ரிசந்தானம் உள்ளிட்ட மக்கள் நீதி மய்யம் நண்பர்கள் கலந்தாலோசித்து உடனடியாக Crowd Funding பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் சுமார் 17லட்ச ரூபாய் வசூலித்து கொடுத்து அவர்கள் கடந்த ஜூன்-15ம் தேதி இந்தியா வருவதற்கு உதவியுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் செய்த உதவியை மறைத்து, மறைந்த திரு. வினோத் ராஜேந்திரன் அவர்களது உடலை இந்தியா கொண்டு வருவதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தான் உதவியதாக திமுக இளைஞரணி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

நற்பணியே மூச்சாக கொண்டு செயல்பட்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களின் உழைப்பை சில அச்சு, காட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வரும் சூழ்நிலையில் தற்போது தமிழக எதிர்க்கட்சியான திமுகவே மக்கள் நீதி மய்யம் கட்சியினரின் செயல்பாடுகளை தங்களின் செயல்பாடுகளாக சித்தரித்து, அதன் நற்பெயரை அபகரிக்க முயல்வதை தொழிலாளர்கள் அணி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

“மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயல்பாட்டை அபகரிக்கும் திமுக” : உதயநிதியை சாடும் மய்யம் நிர்வாகி!

இவ்வுலகில் பிறரது உடமைகளையும், சொத்துக்களையும் மட்டும் திருடுவது திருட்டல்ல. பிறரின் உழைப்பினால் சம்பந்தப்பட்டவருக்கு கிடைக்க வேண்டிய, கிடைத்த நற்பெயரை தங்களின் செயல்பாடுகளாக சித்தரிக்க முயல்வதும் திருட்டுக்கு சமம் தான் என்பதை திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உணர வேண்டும்.

எனவே மக்கள் நீதி மய்யம் கட்சியினரின் செயல்பாடுகளை திமுகவினரின் செயல்பாடுகளாக சித்தரிக்கும் டுவிட்டர் பதிவை உடனடியாக நீக்கவும், பகிரங்க வருத்தம் தெரிவிக்கவும் வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.