மீண்டும் முதலிலிருந்து… மகாராஷ்டிராவில் ஊரடங்கு அமல்!
கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் அதிரடி ஊரடங்கு உத்தரவுகளை மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வெளியிட்டிருக்கிறார்.
இந்தியாவிலேயே மிக அதிக கொரோனா பாதிப்புகளை பதிவு செய்துகொண்டிருக்கும் மாநிலம் மகாராஷ்டிரா. நாட்டின் தினசரி மொத்த கொரோனா பாதிப்புகளில் 60% அளவுக்கு மகாராஷ்டிராவில் தான் பதிவாகிக் கொண்டிருக்கிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 57,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 222 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை முதல் இரவு 8 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல், வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். கூட்டம் கூடுவதற்கு தடை, மால்கள், பார்கள், ரெஸ்டாரண்ட்கள், தியேட்டர்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும்.
தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து 50% பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி. தனியார் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற வாய்ப்பு வழங்கவேண்டும். பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பை தவிர பிற வகுப்புகளை நடத்த அனுமதி இல்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.