நடிகர் சூர்யா மீது மதுரை போலீஸில் புகார்!
நீட் தேர்வு குறித்து வெளியிட்ட அறிக்கையில் நீதிமன்ற மாண்பைக் கெடுக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்த நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை போலீசில் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நீட் தேர்வு தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை
வெளியிட்டிருந்தார். அதில், “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
My heart goes out to the three families..! Can’t imagine their pain..!! pic.twitter.com/weLEuMwdWL
— Suriya Sivakumar (@Suriya_offl) September 13, 2020
இது நீதிமன்ற அவமதிப்பு என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியிருந்தார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், “சூர்யாவின் கருத்து நீதிமன்றத்தின் மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக
விமர்சிக்கும் வகையில் உள்ளது. நீதிமன்றத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
வழங்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் அளித்துள்ள புகாரில், “நடிகர் சூர்யா வெளியிட்ட நீட் தேர்வுக்கு எதிரான அறிக்கையில் நீதிமன்ற மாண்பை கெடுக்கும் வகையிலான வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.