மதுரையில் கொரோனா பரவல் அதிகரிப்பது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை!

 

மதுரையில் கொரோனா பரவல் அதிகரிப்பது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை!

மதுரையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து வழக்காக விசாரிக்க உள்ளது.

கொரோனா பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படுவதில் ஏற்படும் தாமதத்திற்கு என்ன காரணம்? என்பது போன்ற 6 விதமான வினாக்கள் மனுவில் கேட்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பதிவாளர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,” மதுரையில் தீவிரமாக நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் கொரோனோ பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், தாமதத்தின் காரணமாக நோய்த் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது. மேலும் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையான கழிவறை, படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை. பயன்படுத்தப்பட்ட படுக்கைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன என்பது போன்ற செய்திகளும் வெளியாகியுள்ளன. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றம் சில கேள்விகளையும் அதற்கான விடைகளையும் பெற விரும்புகிறது. அதனடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து இதனை வழக்காக பதிவு செய்கிறது. மனுவின் கோரிக்கையாகவே 6 வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் கோரப்பட்டுள்ளன.

மதுரையில் கொரோனா பரவல் அதிகரிப்பது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை!

மனுவில் கேட்கப்பட்டுள்ள 6 வினாக்கள்!

1. கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைகளை சுழற்சி முறையில் மேற்கொள்ளவும், துரிதமாக சோதனைகளை முடிக்கவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தயாராக உள்ளனரா? பிசிஆர் பரிசோதனை கருவிகள் உள்ளனவா?

2. கொரோனா பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படுவதில் ஏற்படும் தாமதத்திற்கு என்ன காரணம்?

3. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வார்டுகள், தனிமைப்படுத்துதல் முகாம்களில் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்த விபரங்கள் என்ன?

4. கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையான கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதா? அவை முறையாக தொற்று பரவா வண்ணம் பராமரிக்கப்படுகின்றனவா? அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படுகிறதா?

5. முன்கள பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், பாரா மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு தேவையான PPE உடைகள் உள்ளனவா?

6. கொரோனா தோற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது அல்லது எரியூட்டுவதற்காக என்ன வசதி செய்யப்பட்டுள்ளது? உள்ளிட்ட வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது