தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி… பல் மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை…
சென்னை
பெருந்துறையில் தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தியில் பல் மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் கஜேந்திரன் (53). இவரது மகன் தேவநாதன். இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பல்மருத்துவ கல்லூரில் 4ஆம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் தேர்வு முடிவு வெளியான நிலையில், அதில் தேவநாதன் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட தேவநாதன் இரவு அறைக்கு தூங்க சென்றார். காலை நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், கதவை உடைத்து சென்று பார்த்தனர். அப்போது, தேவநாதன் தூக்கில் சடலமாக தொங்கினார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பெருந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.