ஓசூரில் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி
ஓசூர் அருகே திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தது.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் அருள் (31). ஓசூரிலுள்ள தனியார் கம்பெனியில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஓசூர் அருகேயுள்ள பேரிகை தண்ணீர் குட்டலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சிவா என்பரின் மகள் மோனிசா (23).
அருளுக்கு திருமணம் செய்ய முடிவெடித்த பெற்றோர்கள் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி மோனிசாவின் வீட்டிற்கு சென்று பெண் பார்த்துள்ளனர். அப்போது அருளும் மோனிசாவும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் பெண் பார்த்து சென்ற பின்னர் மோனிசாவின் பெற்றோர் அருளின் குடும்ப பொருளாதாரத்தை பார்த்து திருமணத்திற்கு தடை போட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அருளும் மோனிசாவும் செல்போன்களில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள அவர்களின் பெற்றோர்களிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அருள் வீட்டில் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், மோனிசாவின் குடும்பத்தார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி இருவரும் இராயக்கோட்டை பகுதியில் உள்ள சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து இன்று பாதுகாப்பு கேட்டு ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.