லாரி மீது சரக்கு வேன் மோதிய விபத்தில், இளைஞர் பலி!

 

லாரி மீது சரக்கு வேன் மோதிய விபத்தில், இளைஞர் பலி!

திருச்சி

துவரங்குறிச்சி அருகே நெடுஞ்சாலை ஓரம் பழுதாகி நின்ற லாரி மீது, சரக்கு வேன் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் இருந்து, நெய்வேலி-க்கு நிலக்கரி பாரம் ஏற்றிச்சென்ற லாரி ஒன்று, நேற்று காலை திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே சென்றபோது பழுதாகி நின்றது. அப்போது, நெல்லையில் இருந்து சென்னைக்கு பழங்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.

துவரங்குறிச்சி அருகே மதுரை – திருச்சி நெடுஞ்சாலையில் வந்தபோது வேன், எதிர்பாராத விதமாக சாலையோரம் பழுதாகி நின்ற லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் வந்த நெல்லையை சேர்ந்த ஓட்டு சபரிராஜ் மற்றும் அவரது மகன் சிம்சன் (25) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

லாரி மீது சரக்கு வேன் மோதிய விபத்தில், இளைஞர் பலி!

தகவலின் பேரில் துவரங்குறிச்சி போலீசார், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், இருவரும் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிம்சன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, சபரிராஜ், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து லாரி ஓட்டுநர் புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்