"கண்ணா ,இந்த இருமளு ,தும்மலு இதெல்லாம் எப்ப வரும் எப்படி வரும்னு தெரியாது ,ஆனா அது வராம தடுக்க இயற்கை வழியிருக்கு "

 
home remedy for cough home remedy for cough

சளி இருமல் வந்தாலே அவை குணமாகும் வரை அதிக அசெளகரியம் தான். சற்று மெனக்கெட்டால் சீக்கிரம் குணப்படுத்தலாம் அதுவும் வீட்டிலேயே.


சளி, இருமல் பிரச்சனை உண்டாக்கும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. அதனோடு தொண்டைவலியும் சேர்ந்தால் இன்னும் அதிக உபாதை தான். சில வேளைகளில் காய்ச்சலும் உடன் சேரும். சளி இருமல் பிரச்சனை வரும் போது எப்படி அதிலிலிருந்து மீள்வது என்பதை தான் இப்போது பார்க்க போகிறோம்

சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி?

உப்புநீரில் வாயைக் கொப்பளித்தல்

தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும்.

இஞ்சி

இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டு

நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும்.

ஆளி விதை

சிறிது ஆளி விதையை நீரில் கொதிக்க வைத்தால் பசை மாதிரி ஆகிவிடும். இதனுடன் இயற்கை ஆன்டிபயாடிக்குகளான (Antibiotics) எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்துப் பருகிவர தொண்டை வீக்கம் குறையும்.

கருமிளகு டீ

கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.

பால் மற்றும் மஞ்சள்

சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருள்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது மஞ்சள் பால்.

எலுமிச்சை சிரப்

ஒரு வாணலியில் 100 மி.லி தேனை ஊற்றி, அதன் அடர்த்தி குறைகிற வரை சூடாக்கவும். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, லவங்கப்பட்டை சேர்த்துப் பயன்படுத்தி வர சளி குறையும்.

வெங்காய சிரப்

ஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கிக்கொள்ளவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும். சூடு ஆறிய பிறகு இதைக் குடிக்கலாம். வெங்காயம் சளி, இருமலுக்கு மிக நல்ல மருந்து. வெங்காயத்தில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் நிறமி, சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது.