எள்ளுக்குள் அடங்கியிருக்கும் அள்ள அள்ள குறையாத ஆரோக்கிய நன்மைகள்

 
ellu

 

.இளைத்தவனுக்கு எள்ளும், கொழுத்தவனுக்கு கொள்ளும் என்பது மருத்துவ பழமொழி.” தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.

 

எள்ளின் மருத்துவப் பண்புகள்

இதய நலத்திற்கு

இவ்விதைகளில் உள்ள எண்ணெயில் கரையக்கூடிய தாவர லிக்னான்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது. இதனால் இதயத்திற்கு ஏற்படும் அழுத்தமானது தவிர்க்கப்படுகிறது.

மேலும் இதில் உள்ள மெக்னீசியம் குழல் விரிப்பியாச் செயல்பட்டு இரத்தநாளங்கள் அடைக்கப்படுவதை தடைசெய்கிறது.

இதில் காணப்படும் ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலமான ஒலீயிக் அமிலம் உடலில் கெட்ட கொழுப்புகளைக் குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்து தமனிகள் மற்றும் இரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது.

இதனால் கரோனரி தமனி நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. எள்ளினை அளவோடு அடிக்கடி உணவில் சேர்த்து இதய நலம் பேணலாம்.

ஆரோக்கியமான செரிமானத்திற்கு

இதில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானம் நடைபெற உதவுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சினைகளைத் தீர்க்கிறது.

அதே நேரத்தில் பெருங்குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து இரைப்பை, குடல் நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கிய செரிமானத்தைப் பெறலாம்.

எலும்புகள் பலம் பெற

இதில் காணப்படும் செம்புச்சத்து, துத்தநாகம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்புகளைப் பலப்படுத்த பயன்படுகின்றன.

இந்த தாதுக்கள் புதிய எலும்புகளின் உருவாக்கத்திற்கும், காயத்தால் பலவீனமடைந்த எலும்புகளை வலுப்படுத்தவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து ஆஸ்டிபோரோஸிஸைத் தடுக்கவும் உதவுகின்றன. எனவே இதனை உண்டு ஆரோக்கியமான எலும்புகளைப் பெறலாம்.

சரும ஆரோக்கியத்திற்கு

இவ்விதைகளில் உள்ள துத்தநாகச் சத்தானது கொலாஜன் உற்பத்திக்கு அவசியமான ஒன்றாகும். கொலாஜன் தசை, திசுக்கள், கேசம் மற்றும் சருமம் ஆகியவற்றிற்கு வலிமை அளிக்கிறது.

இதில் உள்ள விட்டமின் இ-யானது முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் காயங்களை நீக்க உதவுகிறது.

மேலும் வயதோதிகத்தால் சருமத்தில் உண்டாகும் சுருக்கங்களைப் போக்குகிறது. சருமத்தில் நல்ல எண்ணெய் தேய்த்தும், எள்ளினை உட்கொண்டும் சரும ஆரோக்கியத்தைப் பேணலாம்.

கேசப் பராமரிப்பிற்கு

இவ்விதையானது தாவர பாலிபினால்களைக் கொண்டுள்ளது. இப்பாலிபீனால்கள் கேசப் பராமரிப்பிற்கு உதவுகிறது.

நல்லெண்ணையை கேசத்தில் தடவும் போது இதில் உள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இளநரையைத் தடுப்பதோடு ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

இதில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் கேசத்திற்கு பளபளப்பைத் தருகின்றன.

புற்றுநோயைத் தடைசெய்ய

இவ்விதைகளில் காணப்படும் எண்ணெயில் கரையக்கூடிய லிக்னான்களான சீசமின் மற்றும் சீசமோல் ஆகியவை ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன. இவை புற்றுநோயைத் தடை செய்பவையாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதில் உள்ள விட்டமின் இ, மெக்னீசியம் போன்றவை புற்றுநோயைத் தடைசெய்பவைகளாக விளங்குகின்றன.

மேலும் இதில் உள்ள பைட்டேட் அரியவகை புற்றுநோயைத் தடுக்கும் கலவையாகும். பைட்டேட் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டினை தடைசெய்து புற்றுநோய் உருவாக்கத்தைத் தடைசெய்கிறது.

வாய் பராமரிப்பிற்கு

இவ்விதையானது வாயின் ஆரோக்கியத்தில் சக்தி வாய்ந்த விளைவுகளை ஏற்படுத்துகிறது. நல்லெண்ணையை வைத்து வாய் கொப்பளித்தல் என்பது வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வாய் துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

வாயின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாவை வாய் கொப்பளித்தல் முறையில் நீக்கி வாயினைப் பராமரிக்கலாம்.

ஹார்மோன் அளவினை சீராக வைக்க

இவ்விதையில் உள்ள சீசமின் என்ற லிக்னானானது குடலில் எண்டோரோலாக்டோனாக மாற்றப்படுகிறது. இது ஈஸ்ட்ரோஜனின் செயல்பாட்டினைக் கொண்ட பைட்டோ ஈஸ்டரோஜன் கலவை ஆகும்.

பெண்களுக்கு வயதாகும்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறைகிறது. எனவே ஈஸ்ட்ரோஜனின் அளவில் குறைபாடு உள்ளவர்கள் இதனை உண்ணும்போது ஹார்மோனின் அளவினை சீராகிறது.

அத்தோடு உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவினையும் கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கிறது.

சீரான இரத்த ஓட்டத்திற்கு

இவ்விதையில் உள்ள செம்புச்சத்தானது இரும்புச்சத்தை உடல் உட்கிரகிக்கவும், ஹீமோகுளோபின்களின் உருவாக்கத்திற்கும் உதவுகிறது.

மேலும் உடல் உறுப்புக்கள் நன்கு செயல்பட செம்புச்சத்தின் காரணமாக ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடலின் பாகங்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் விரைந்து அளிக்கப்படுகிறது.

இரத்த நாளங்கள், எலும்புகள், மூட்டுகள் ஆகியவற்றின் வலிமைக்கு செம்புச்சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இதனால் எள்ளினை உண்டு சீரான இரத்த ஓட்டத்தைப் பெறுவதோடு மூட்டுகள், தசைகள், எலும்புகளில் உண்டாகும் வலிகளையும் போக்கிக் கொள்ளலாம்.