மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை – போலீஸ் விசாரணை
கிருஷ்ணகிரி
ஓசூர் அருகே 62 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர்கள், அவரை கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு, நகைகளை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே கப்பக்கல் கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி நஞ்சம்மாள்(62). கணவரை இழந்த, இவர் ஆடுமேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை அப்பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையின் ஸ்கிராப் பொருட்களை எடுப்பதற்காக நஞ்சம்மாள் சென்றுள்ளார். அப்போது, பின்தொடர்ந்து சென்ற மர்மநபர்கள் சிலர், அவரை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளனர். மேலும், அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் பறித்து சென்றனர்.
நீண்ட நேரமாகியும் நஞ்சம்மாள் வீடு திரும்பாததால் தேடி சென்ற அவரது மகன் ராமய்யா, வயல் பகுதியில் அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.