மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் ஈரோட்டு பெண்ணுக்கு பொருத்தி சாதனை

 

மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் ஈரோட்டு பெண்ணுக்கு பொருத்தி சாதனை

மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் ஆம்புலன்சு மூலம் 3 மணி நேரத்தில் ஈரோடு கொண்டு செல்லப்பட்டு, சிறுநீரகம் செயல் இழந்த பெண்ணுக்கு பொருத்தி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கரூர் மாவட்டம் கீழ பகுதி சங்கிபூசாரி ஊரை சேர்ந்த ரேணுகோபால் மனைவி ஜெகதாமணி(45). இவர் கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரகம் செயல் இழந்து, கரூர் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையில் தமிழ்நாடு உடல் உறுப்பு தானம்(ஆர்கன் ஷேரிங்) அமைப்பில் சிறுநீரகம் பெற ஜெகதாமணி பதிவு செய்து, 2 ஆண்டுகளாக சிறுநீரகத்திற்காக காத்திருந்தார்.

மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் ஈரோட்டு பெண்ணுக்கு பொருத்தி சாதனை

இந்நிலையில், மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் கருப்பையா என்பவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய உள்ளதாகவும், அதில், அவரது சிறுநீரகம், ஜெகதாமணிக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெகதாமணி ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி கேரின் தலைமை மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ரத்த பரிசோதனை, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு சிறுநீரகம் பொருத்தலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஜெகதாமணியை தயார்ப்படுத்தினர்.

இதையடுத்து மதுரையில் இருந்து மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் ஆம்புலன்சு மூலம் ஈரோட்டிற்கு கொண்டு செல்ல போக்குவரத்து போலீசாரும் அனுமதித்தனா். பின்னர், மதுரையில் இருந்து 10 மணிக்கு புறப்பட்ட ஆம்புலன்சு, மின்னல் வேகத்தில் ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு மதியம் 1.20 மணியளவில் வந்து சேர்ந்தது. பின்னர், அம்மருத்துவமனையின் டாக்டர் சரவணன் தலைமையிலான குழுவினர் ஜெகாதாமணிக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன், ‘’கடந்த 2018ம் ஆண்டு அவரது பெயரை பதிவு செய்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்து வந்த ஜெகதாமணிக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு சிறுநீரக தானம், உடல் உறுப்பு தானத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது’’என்கிறார்.