கர்நாடகத்தில் இறந்த மனைவியின் தத்ரூப மெழுகு சிலையை உருவாக்கிய கணவன்!
கர்நாடக மாநிலம் கோபல் மாவட்டத்தில் விபத்தில் பலியான மனைவியின் மெழுகு சிலையை தயாரித்து புது வீட்டின் கிரகப்பிரவேசத்தை நடத்திய கணவன் ஒருவர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மெழுகு சிலை என்றால் லண்டனில் உள்ள மேடம் துசாட்ஸின் அருங்காட்சியம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். அதை மிஞ்சும் வகையில் இந்தியாவின் தன் மனைவியின் மெழுகு சிலையை ஒருவர் வடித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் கோபல் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஶ்ரீனிவாஸ் குப்தா. இவரது மனைவி மாதவி கடந்த 2017ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். இதனால் இவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியது.
ஶ்ரீனிவாஸ் தன்னுடைய மனைவியின் விருப்பப்படி அவரது கனவு இல்லத்தைக் கட்டினார். மேலும், கிரக பிரவேசத்தின் போது மனைவியும் உடன் இருக்க வேண்டும் என்று கருதிய அவர் மெழுகு சிலையை உருவாக்க திட்டமிட்டார். அதன்படி மெழுகு சிற்பக் கலை நிபுணர் ரக்னனோவர் என்பரின் உதவியோடு தன் மனைவியின் மெழுகு சிலையை தத்ரூபமாக உருவாக்கி அந்த வீட்டில் வைத்துள்ளார். அந்த மெழுகு சிலை முன்பாக வீட்டின் கிரக பிரவேசம் நடந்தது.
மனைவியுடன் ஶ்ரீனிவாஸ் குப்தா மற்றும் அவரது இரண்டு மகள்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது கர்நாடகாவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.