ரத்தம் வழியும் நிலையில் காரில் சென்ற பென்னிக்ஸ்…. ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்படாதது ஏன் ?- கனிமொழி

 

ரத்தம் வழியும் நிலையில் காரில் சென்ற பென்னிக்ஸ்…. ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்படாதது ஏன் ?- கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பென்னிக்ஸின் பிறப்புறுப்பில் எட்டி உதைத்ததற்கான அடையாளங்களும் உடற்கூராய்வில் தெரியவந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், பென்னிக்ஸின் போர்வையில் ரத்தக்கறை படிந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்.பி, “ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடுமையாக தாக்கப்பட்டு ரத்தம் வழியும் நிலையில் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சென்ற காரின் இருக்கையிலும் ரத்தக்கறை படிந்து உள்ளது. இப்படியிருக்க, மருத்துவர் எப்படி உடற்தகுதி சான்றிதழ் அளித்தார் ? மாஜிஸ்திரேட் எப்படி இதனை கவனிக்காமல் விட்டார் ? சிறை அதிகாரிகள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பாமல் எதற்காக சிறையில் அடைத்தனர் ? இவற்றுக்கான காரணங்கள் தெளிவாகத் தெரிந்தும் ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்படாதது ஏன் ? ” என பதிவிட்டுள்ளார்.