பிரதமர் மோடி பாராட்டிய நாமக்கல் லாரி டிரைவரின் மகள் கனிகா!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மனதில் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக பொதுமக்களிடம் பேசுவது வழக்கம். இன்று அவர் பேசுகையில் சமூக ஊடகங்களில் கருத்துகள் பதிவது பற்றியும் கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருக்கும் காலத்தில் நடந்துகொள்ளும் விதம் பற்றியும் விரிவாகக் கூறினார். குறிப்பாக மாஸ்க் அணிவதைத் தவிர்க்கக் கூடாது என்று வலியுறுத்தினார். இவை தவிர வேறு சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.
நாட்டு விஷயங்களைப் பேசியதோடு நாமக்கல்லைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் எஸ்.கே.நடராஜன் என்பவரின் மகள் கனிகா சிபிஎஸ்இ ப்ளஸ் டூ-2020-பொதுத்தேர்வில் தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்ததைக் குறிப்பிட்டு பேசினார். ஏழை குடும்பத்தில் பிறந்து மிக நல்ல முறையில் கல்வி கற்று இன்று மருத்துவராக வரவேண்டும் என்ற கனவுடன், லட்சியத்துடன் தமது கல்வி பயணத்தை தொடரும் மாணவிக்கு பிரதமர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் அவரது சகோதரி ஷிவானி என்பவர் அவரும் மருத்துவம் படித்து வருவதையும் பிரதமர் பாராட்டினார். ஏழை குடும்பத்தில் இருந்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் மிக நல்ல முறையில் நாட்டிற்கு சேவை ஆற்ற முடியும் என்றும் வாழ்த்தினார்.
கனிகா பகிரும்போது, ’நம் நாட்டின் பிரதமர் என்னைப் பற்றி பேசியது ரொம்ப பெருமையாக இருக்கிறது’ என்றார். அவரின் குடும்பத்தினரும் பிரதமருக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.