ஊட்டி ரயில் தனியாருக்கு குத்தகை; கொண்டாட்டமும், குதூகலமும் பணம் படைத்தவர்களுக்கே- கமல்ஹாசன்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இயற்கை எழிலுடன் கூடிய மலைமுகடுகளை இந்த மலை ரயிலில் பயணிக்கும் போது கண்டு ரசிக்க முடியும் என்பதால், இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில், தற்போது மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, தெற்கு ரயில்வே இயக்கி வந்த மலை ரயில்கள் தற்போது, தனியார் ஏஜென்சிக்கு குத்தகை விடப்பட்டதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் ஏஜென்சிக்கு மலை ரயில் குத்தகைக்கு விடப்பட்டதால், மலை ரயில் கட்டணம் ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டிருப்பது ஏழை, எளிய மக்களின் கனவை சீர்குலைக்கும் விதமாக அமைந்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், “பண்டிகை நாட்களை ஒட்டிய விடுமுறை தினங்களில்தான் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள். கூட்டம் கூடும் தினங்களில் ஊட்டி மலை ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து இயக்கினால், டிக்கெட் விலை பன்மடங்காகத்தான் இருக்கும். எந்தச் சிறிய கொண்டாட்டமும், குதூகலமும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமையை ரயில்வே உருவாக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.