மாற்றுத்திறனாளி ஒருவரை சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவோம்- கமல்ஹாசன்

 

மாற்றுத்திறனாளி ஒருவரை சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவோம்- கமல்ஹாசன்

தலைநிமிரட்டும் தமிழகம் என்ற பெயரில், மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை திருச்சியில் கமல்ஹாசன் மேற்கொண்டு வருகிறார். திறந்த வேனில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மக்களை சந்தித்த மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன், தொடர்ந்து திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் சிறு குறு தொழில் முனைவோர் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், “முழு நேரம் யாரும் எதையும் கிழிப்பதில்லை என்ற பெரியாரின் வாக்கினை போல் நானும் அப்படி நடந்துகொள்கிறேன். எம்ஜிஆர் வைத்த இலை இப்படி துளிர்க்கும் என அவர் நினைத்திருக்க மாட்டார். என் தந்தையிடம் கற்ற மரியாதை காரணமாக தான் இன்றைய கொள்ளையர்களை கூட நான் திட்டியதில்லை. இலவசங்கள் அனைத்தும் மக்கள் பணம். நியாயமாக மக்களுக்கு வந்து சேர வேண்டிய பணம். ஏழ்மையை இந்த அரசு பாதுகாத்து வைத்துள்ளது. நாங்கள் சிறந்த திட்டங்கள் வைத்துள்ளோம். ஏழைகள் தான் ஓட்டு போடுகிறார்கள். பணக்காரர்கள் ஓட்டு போட வருவதில்லை. வாக்களிக்க வந்தாலும் அங்கு நிற்பவர்களை பார்த்து திரும்பி விடுகின்றனர்.

மாற்றுத்திறனாளி ஒருவரை சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவோம்- கமல்ஹாசன்

தமிழ்நாட்டை ஒன் ட்ரில்லியன் எகனாமியாக மாற்ற வேண்டியது மக்கள் நீதி மையத்தின் திட்டம். அவ்வாறு மாற்ற தேவைப்படுவது நேர்மையான அரசு. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மக்கள் நீதி மையம் முக்கியத்துவம் கொடுக்கும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டிரேட் சென்டர் அமைக்கப்படும். உலக தரத்திலான தொழில் நுட்பம் கொண்டு குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் எரிசக்தி கிடைப்பதோடு குப்பை காடாக இருக்கும் நம்முடைய நகரம் தூய்மையடையும்.

தேர்தல் என்பது ஓட்டு மட்டும் அல்ல. மாற்றத்தை ஏற்படுத்த நாம் எல்லோரும் கூடி இழுக்க வேண்டிய தேர். ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் ஊழலை தடுக்க வேண்டியது நமது கடமை. ஊழலை நீக்குவதற்கான தான் அரசியலுக்கு வந்தேன் தொடர்ந்து செயலாற்றுவேன். அரசியல் பிரசுரங்களில் எதுகை, மோனையுடன் பேசும் அரசு நாங்கள் அல்ல. மக்கள் நீதி மையம் சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளி ஒருவர் பிரதிநிதியாக நிச்சயம் இருப்பார். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை கிடப்பில் இருக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க இது உதவும். இது நேர்மையானவர்கள் கூட்டம். நான் நட்சத்திரம் அல்ல. இனி உங்கள் வீட்டில் உள்ள சிறு விளக்கு. ஊழலுக்கு எதிராக இந்த விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். அதை அணையாமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு” எனக் கூறினார்.