செல்வத்தை பெருக வைக்கும் கஜலட்சுமி!

 

செல்வத்தை பெருக வைக்கும் கஜலட்சுமி!

சுக்கிர ஓரையில் செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிதேவியின் அவதாரங்களில் நடுநாயகமாக வீற்றிருக்கும் கஜலட்சுமியை வழிபட்டால், செல்வம், புகழ், ஆளுமை திறன் ஆகிய மூன்றையும் தருவாள். இவள், நம் வீட்டின் நிலைப்படிமேல் அமர்ந்துள்ளதால், ‘திருநிலை நாயகி’ என்றும் அழைக்கப்படுகிறாள். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு, அவர்கள் விரும்பியதை விரும்பியவாறு நிறைவாக அளித்து, அந்த இல்லத்தில் சகல சௌபாக்கியங்களும் செல்வவளத்தையும் பெருகச்செய்வாள்.

செல்வத்தை பெருக வைக்கும் கஜலட்சுமி!

இவளைச் சாந்த லட்சுமி, தயா லட்சுமி, சுதந்திர லட்சுமி என்று பலவாறு போற்றுகின்றனர். தாமரை மலரில் பத்மாசன நிலையில் திருமகள் வீற்றிருக்க, இருபுறமும் தேவ யானைகள் நின்று புனித நீரால் அபிஷேகம் செய்யும் நிலையில் கஜலட்சுமி காட்சியளிக்கிறாள். சில படங்களில், யானைகள் லட்சுமிக்கு கவரி வீசுவது போலவும் காணப்படுவாள். மேற்கரங்களில் தாமரை மலரையும், கீழ்க் கரங்களில் அபயவரத முத்திரைகளையும் தாங்கி அருள்பாலிக்கிறாள் கஜலட்சுமி.

செல்வத்தை பெருக வைக்கும் கஜலட்சுமி!

ஸ்ரீ சூக்தம் அவள் யானைகளின் பிளிறலால் மகிழ்வதாகக் கூறுகிறது. இவளுக்கு ராஜலட்சுமி என்ற பெயரும் உண்டு. மனிதனின் வாழ்வு வளம்பெற தேவையான செல்வம், புகழ், ஆளுமை திறன் ஆகிய மூன்றையும், தருபவள் இவள் தான். குறிப்பாக, மன்னர்களிடத்தில் அதாவது ஆளுமை திறன் உள்ளவர்களிடத்தில், வாசம் செய்பவள் ராஜலட்சுமி.யானைகள் செல்வத்தின் அடையாளமாகும். யானையை லட்சுமியாகப் போற்றுகின்றனர். பூஜைகளின் தொடக்கத்தில் செய்யப்படும் கஜ பூஜையால் மகிழும் மகாலட்சுமி, அந்த இடத்தில் பரிவாரங்களுடன் எழுந்தருள்கிறாள் என்று நம்புகின்றனர். தீபங்கள், யானைகள், பூரண கும்பம் ஆகியன லட்சுமிகடாட்சம் நிறைந்தவை. இந்த மூன்றும் இருக்கும் இடத்தில் செல்வவளத்துக்குக் குறைவிருக்காது.

செல்வத்தை பெருக வைக்கும் கஜலட்சுமி!

செல்வத்தை வாரி வழங்கும் ஸ்ரீகஜலட்சுமியை வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி நாட்களில் மனதார வேண்டியவாறு ‘ஓம் ஸ்ரீம் ச் ரீயை நம தனம் ஆகர்ஷய ஆகர்ஷய’ என்ற மூல மந்திரத்தை 1008 முறை மெதுவாகவும், நிதானமாகவும் பாராயணம் செய்யலாம். மல்லிகை பூ அல்லது தாமரை இதழ்களால் ‘ஓம் ஸ்ரீமகாலக்ஷ்மி சவுபாக்கிய தாரண்யை நம’ என்று 108 முறை அர்ச்சித்து வழிபடலாம். அர்ச்சித்தப்பின்பு, நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் அல்லது இனிப்பலான ஏதேனும் ஒரு பலகாரம் படைத்து, தூபதீபம், கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்து வழிபடுவது அனைத்து வளங்களையும் பெறலாம்.

  • வித்யா ராஜா