கைது செய்யப்பட்ட 5 காவலர்கள்; தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையை கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி இந்த வழக்கில் 24 மணி நேரமாக அதிரடி விசாரணை மேற்கொண்ட போலீசார், கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் 5 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
அதன் படி இன்று காலை 6:30 மணிக்குள் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த இரட்டை கொலை வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பாக செயல்பட்டு 5 காவலர்களையும் பிடித்த சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, இரட்டை கொலை வழக்கில் கைதான் காவலர்களை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்த நீதிபதிகள் அனுமதி அளித்தனர். 107 கி.மீ தொலைவில் இருக்கும் கோவில்பட்டிக்கு கைதானவர்களை அழைத்துச் செல்வது கடினம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதித்துறை நடுவருக்கு அனைத்து அதிகாரங்களையும் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.