கொரோனா பரவல் அதிகரிப்பு; திண்டுக்கல்லில் 10 நாட்களுக்கு நகைக்கடைகள் மூடல்!
Jul 7, 2020, 14:53 IST1594113793000
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது 725 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 7 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு நகைக்கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நகைக்கடைகள் அடைக்கப்பட்டது குறித்துப் பேசிய நகைக்கடை உரிமையாளர்கள், திண்டுக்கல்லில் ஆயிரக்கணக்கான நகைக்கடைகள் இருப்பதால், தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பொதுமக்களைச் சந்திக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் கொரோனா அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் மற்றும் அரசுக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.