“தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை” : அன்புமணி ராமதாஸ்

 

“தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை” : அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வு ரத்து குறித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் ஏ.கே.இராஜன் குழுவுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், நீட் தேர்வுக்கு எதிரான முயற்சிகள் வெற்றி பெறாதோ? என்ற ஐயத்தை மாணவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளன. மாணவர்களின் அச்சத்தை போக்க வேண்டியது நீட் தேர்வை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுகவின் கடமை ஆகும்.

நீதியரசர் ஏ.கே.இராஜன் குழுவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு,‘‘உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இது தொடர்பான தீர்ப்பை பாதிக்கும் வகையில் எந்த மாநிலங்களும் முடிவெடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், நீட் தேர்வை பாதிக்கும் வகையில் தமிழக அரசு குழுவை அமைத்துள்ளதே? இதற்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா?’’ என கேள்வி எழுப்பினர். நீதியரசர் ஏ.கே.இராஜன் குழுவுக்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், ஏ.கே.இராஜன் குழு அமைக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளிக்கக்கூடும். அது நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.

“தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை” : அன்புமணி ராமதாஸ்

அத்தகைய சூழல் ஏற்பட்டால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்ந்து நடத்தப்படுமோ? ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு நிரந்தமாக கருகி விடுமோ? என்ற மாணவர்களின் ஐயமும், அச்சமும் நியாயமானவை தான். அந்த அச்சத்தைப் போக்கவும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறவும் அடுத்தடுத்து என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க இது அவசியமாகும்.

காங்கிரசும், திமுகவும் ஆயிரமாயிரம் முறை மறுத்தாலும் இந்தியாவில் நீட் திணிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் & திமுக கூட்டணி அரசு தான் காரணம் ஆகும். நீட் தேர்வு செல்லாது என்று 2013&ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அத்தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ததும் காங்கிரஸ் & திமுக கூட்டணி அரசு தான். அப்போது தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவின் அடிப்படையில் தான் நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நீட் தேர்வு சட்ட அங்கீகாரம் பெற்றதற்கு இந்தத் தீர்ப்பு தான் காரணமாகும். அந்த வகையில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்றுத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் திமுக அரசுக்கு இருக்கிறது.

“தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை” : அன்புமணி ராமதாஸ்

ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதற்காக சென்னையில் உண்ணாநிலை உள்ளிட்ட போராட்டங்களை எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான கடந்த ஆட்சியின் முயற்சிகளுக்கு பா.ம.க. ஆதரவு அளித்தது. நீட் தேர்வுக்கு எதிரான இப்போதைய அரசின் நடவடிக்கைகளுக்கும் பா.ம.க. முழு ஆதரவை அளித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக நீட் தேர்வை ரத்து செய்வதற்கான காரண காரியங்களை விளக்கி நீதியரசர் ஏ.கே.இராஜன் குழுவிடம் விரிவான மனுவைத் தாக்கல் செய்துள்ளேன்.

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்து விட்ட நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இது முந்தைய ஆட்சியில் முயற்சி செய்யப்பட்டு வெற்றி பெறாத திட்டம் தான். கடந்த முறை எந்த புள்ளி விவரங்களும் இல்லாமல் சட்டம் இயற்றப்பட்ட நிலையில், இந்த முறை புள்ளி விவரங்களைத் திரட்ட நீதியரசர் ஏ.கே.இராஜன் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் நீட் சவாலை அரசு எவ்வாறு முறியடிக்கும் என்பதே வினா?

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவது எளிதானது அல்ல என்பதை திமுகவும் நன்கு அறியும். ஆனாலும், நீட் தேர்வை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த திமுகவே, அத்தேர்வை ரத்து செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்தது. அதனால், எப்பாடுபட்டாவது நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டியதும், அதன் மூலமாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதும் திமுக அரசின் கடமையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.