‘இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த பரிந்துரைக்கவில்லை’ – தேர்தல் அதிகாரி பேட்டி!

 

‘இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த பரிந்துரைக்கவில்லை’ – தேர்தல் அதிகாரி பேட்டி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. பிரதான கட்சிகள் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன. இதனிடையே பீகார் தேர்தல் முறை தமிழகத்திலும் பின்பற்றப்படவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அங்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டதை போன்று இங்கு இரண்டு கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. தேர்தல் ஆணையம் இதனை பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டது.

‘இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த பரிந்துரைக்கவில்லை’ – தேர்தல் அதிகாரி பேட்டி!

அண்மையில் சென்னை வந்த இந்திய தேர்தல் ஆணையக் குழுவும் இது தொடர்பாக பிரதான கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய போது, திமுக இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இந்த நிலையில், இது குறித்து தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த பரிந்துரைக்கவில்லை என்றும் இதுவரை நடந்த எல்லா தேர்தல்களும் ஒரே கட்டமாக நடந்ததால் இந்த முறையும் இரண்டு கட்டமாக நடத்த எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், தமிழகத்தில் ஒரே கட்டமாகவே தேர்தல் நடத்தப்படவிருப்பது உறுதியாகியிருக்கும் நிலையில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.