’விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு இந்த நாடே காரணம்’ ஈரான் அமைச்சர் சுட்டும் நாடு?
ஈரான் நாட்டில் மிக உயர்ந்த விஞ்ஞானி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் செய்தி அறிவுலக வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானைச் சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி மெஹ்சென் ஃப்க்ஹிஸாத் (Mohsen Fakhrizadeh) மிகவும் புகழ்பெற்றவர். அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சக தலைவராகவும் பணியாற்றுபவர். ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இமாம் ஹுசைன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் ஈரானிய ராணுவத்தில் சுமார் 40 ஆண்டுகள் இணைந்து தம் பங்களிப்பைச் செலுத்தியவர்.
ஈரானின் அணு ஆயுத சோதனை தகவல்களால், மெஹ்சென்னுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் ஏற்கெனவே இருந்தது. அதனால், அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
நேற்று ஈரானிய தலைநகரான தெஹ்ரானில் மெஹ்சென் காரில் சென்றுக்கொண்டிருந்தபோது, யார் என அடையாளம் காண முடியாத சிலர் வெடிகுண்டுகள் மூலம் அவர் கார் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அதனால், படுகாயம் அடைந்த விஞ்ஞானி மெஹ்செனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டார்.
இந்தத் தாக்குதலை யார் நடத்தினார் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. ஆயினும், ஈரானில் வெளியுறவு அமைச்சர் ஷாரிஃப் அதிரடியான தகவலைக் கூறியுள்ளார். ‘இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்கு முழு காரணம் இஸ்ரேல்தான் என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடி இருக்கும் என ஈரானில் ராணுவ தளபதி ஏற்கெனவே கூறியிருந்தார். எனவே, இந்த விவகாரம் பெரியதாக வெடிக்கவே வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.