இந்துக்களுக்கு கொரோனா வராமல் தடுப்பது ஆண்மையில்லையா? – எச்.ராஜாவுக்கு நெட்டிசன்கள் கேள்வி
கர்நாடகாவில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதித்துள்ளது ஆண்மையுள்ள அரசு என்று எச்.ராஜா பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களைக் காப்பாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கைதான் உண்மையின் ஆண்மையுள்ள அரசு என்று பலரும் எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஏதாவது செய்து கட்சியை வளர்த்துவிட வேண்டும் என்று பா.ஜ.க எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளுக்கும் அக்கட்சியின் எச்.ராஜா உள்ளிட்டவர்களே குறுக்கே வந்து நிற்கின்றனர். ஊரே கொரோனா பீதியில் இருக்கும்போது, தெருவுக்குத் தெரு விநாயகர் சிலை வைத்தே தீருவோம் என்று இந்து முன்னணி வம்பு செய்ய, அதற்கு பா.ஜ.க தலைவர்களும் ஒத்து ஊதி வருகின்றனர்.
கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு.
— H Raja (@HRajaBJP) August 19, 2020
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் அங்கு பொது இடங்களில் விநாயகர் சிலை அமைத்து, ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. தமிழகத்திலும் அதே போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் பா.ஜ.க போர்க்கொடி உயர்த்தியது.
இதற்கிடையே கர்நாடகாவில் சிலை அமைக்க எடியூரப்பா அனுமதி வழங்கினார். இதற்காக எச்.ராஜா வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிலிருந்து சென்னையிலும் டாஸ்மாக் திறக்கப்பட்டு விட்டது. இதனால் கொரோனா வராதாம். ஆனால் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 5-10 பேர் சமூக இடைவெளியோடு விசர்ஜனம் செய்தால் கொரோனா வந்துடுமாம். பகுத்தறிவு. பகுத்தறிவு.
— H Raja (@HRajaBJP) August 19, 2020
தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் காரணமாக கிட்டத்தட்ட 8000 வரை சென்ற கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்க சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் என பலரும் இரவு பகல் கண்விழித்து வேலை செய்து வருகின்றனர்.
கொரோனா காரணமாக தமிழகத்தில் பொது இடங்களில் விழாக்கள் நடத்த எந்த மதத்தினருக்கும் அனுமதி இல்லாத நிலையில், இந்துக்களுக்கு மட்டும் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதிக்காதது போன்ற தோற்றத்தை எச்.ராஜா உள்ளிட்டவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.
ஓ அப்படியா? இந்த சாராயக்கடை முன்னாடி கும்பல் நிக்குதே அதனால் கொரோனா வராதாம்? இதுதான் பாதுகாக்கும் லட்சணமா? ஆமாம் இந்த தப்லிகி ஜமாத் நிணைவில்லையா https://t.co/04u5BrXsy2
— H Raja (@HRajaBJP) August 19, 2020
மத்திய அரசு ஊரடங்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், பொது இடங்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. மத்தியில் தங்கள் அரசு பிறப்பித்த உத்தரவை மாநிலத்தில் தங்கள் சௌகரியத்துக்கு மீற வேண்டும் என்று எச்.ராஜா உள்ளிட்டவர்கள் கூறுவது வேதனையை ஏற்படுத்துகிறது.
எந்த நெருக்கடிக்கும் இடம் அளிக்காமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளிக்க மறுத்திருப்பது சமூக ஊடகங்களில் பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது. “ஆண்மை என்பது மக்களின் உயிருடன் விளையாடுவதல்ல. பாதுகாப்பது” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் துணிவைப் பாராட்டி பலரும் எச்.ராஜாவுக்கு பதிலிட்டு வருகின்றனர். முதல்வரின் மக்கள் நலப் பணிக்கு பதில் அளிக்க முடியாமல் தப்லிக் ஜமாத், டாஸ்மாக், அது, இது என்று உளறிக் கொட்டி வருகிறார் எச்.ராஜா!