சிறுமியை மிரட்டி… அதிமுக நிர்வாகியின் அராஜகத்திற்கு முடிவு கட்டிய ஓபிஎஸ் – இபிஎஸ்
சிறுமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அதிமுக நிர்வாகி. கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறி அவர் கட்சியில் இருந்தும் தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் கௌதம்(27). இவர், அதிமுகவின் குடியாத்தம் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவராக இருந்து வந்துள்ளார். தான் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும் கௌதமிடம் இனி பேசக்கூடாது என்று சிறுமியை கண்டித்து வைத்துள்ளனர்.
இந்தநிலையில் கௌதம் சிறுமியின் வீட்டுக்கு சென்று சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். தன் மகள் இன்னும் படிக்க வேண்டியது இருக்கிறது. அவள் சிறுமியாக உள்ளார். அதனால் அவளை திருமணம் செய்து வைக்க முடியாது என்று மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கௌதம் சிறுமியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
கட்சியினர் , மக்கள் மூலமாக இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டனர் . இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கவுதமை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்.
இந்த விவகாரம் கட்சியின் தலைமைக்கு தெரியவர, கழகத்தின் கொள்கை குறிக்கோள் களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கழகத்தில் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் வேலூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குடியாத்தம் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் கவுதம் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் உத்தரவிட்டுள்ளனர்.