சர்வதேச யோகா தினம் 2020 : நரம்பு மண்டலத்தை சீராக்கும் பத்மாசனம்!
Jun 18, 2020, 10:12 IST1592455324000
உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. யோகாசனத்தில் மிகவும் எளிமையானது பத்மாசனம். பத்மம் என்றால் தாமரை. தாமரை மலரைப் போன்று பாதங்கள் விரிந்து காணப்படுவதால் இந்த ஆசனத்துக்கு பத்மாசனம் என்று பெயர்.
பத்மாசனம் செய்யும் முறை:
- தரைவிரிப்பில் அமர்ந்து கொண்டு வலது பாதம் இடது தொடையின் மேலும், இடது பாதம் வலது தொடையின் மேலும் வைத்து பொருத்தி அமைத்துக் கொள்ளவேண்டும்.
- முதுகு வளையாமல் நேராக அமர வேண்டும்.
- கைகள் இரண்டும் சின் முத்திரையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது கட்டைவிரலின் நுனியும், ஆட்காட்டி விரலின் நுனியும் தொட்டு கொண்டு இருக்குமாறு அமைய வேண்டும்.
- மற்ற மூன்று விரல்களையும் விரிந்த நிலையில் முழங்கால் முட்டி மேல் கைகளை வைக்கவேண்டும். நமது எண்ணங்களை கட்டுப்படுத்தவே இந்த சின்முத்திரை.
- பிறகு கண்களை மூடி இஷ்டதெய்வத்தை நோக்கி பிரார்த்தனை செய்யலாம்.
- இந்த ஆசனத்திற்கு கால வரையறை எல்லாம் கிடையாது. கால்கள் வலியெடுக்க ஆரம்பிக்கும் வரை செய்யலாம்.
- இந்த ஆசனத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏன் கர்ப்பிணிப் பெண்கள் கூட செய்யலாம்.
நன்மைகள் என்ன?
- நம்முடைய நரம்பு மண்டலத்தை சீராக்குகிறது.
- உடலில் உள்ள நச்சு வாயுவான கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றி மூச்சு சீராக இயங்குவதற்கு உதவி செய்கிறது.
- கால் எலும்புகளை பலப்படுத்துகிறது .
- நேராக அமரும் போது முதுகெலும்பு தொடர் வழியே மூளைக்கு செல்லும் நரம்புகளை சீராக்குகிறது.
- நாள்தோறும் செய்வதால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.
நமது கர்மாவையும், ஆத்மாவையும் கரையேற்ற வந்த ஆசனமே பத்மாசனம் என்றும் ஒரு மனிதனை நெறிப்படுத்தி உய்வித்து அவனை ஞானியாக்கும் ஆசனம் என்றும் யோகிகள் புகழ்ந்துள்ளனர்.