ஸ்வீட் எடுங்க… கொண்டாடுங்க… கடனுக்கான வட்டியை குறைத்தது எஸ்.பி.ஐ……..
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அனைத்து ஒரு வருட முதிர்வு கால கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் அந்த வங்கி வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி செலவினம் சிறிது குறையும்.
கடந்த வாரம் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால், ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்காததால் பொதுத்துறை அதனை காரணம் காட்டி கடனுக்கான வட்டியை குறைக்காது என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. அனைத்து ஒரு வருட முதிர்வு கால கடனுக்கான மார்ஜினல் காஸ்ட் (எம்.சி.எல்.ஆர்.) எனப்படும் அடிப்படை வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த வட்டி குறைப்பால் வாடிக்கையாளர்களின் வட்டி செலவினம் சிறிது குறையும். மேலும் எஸ்.பி.ஐ. வங்கியை பின்பற்றி மற்ற வங்கிகளும் கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்புள்ளது.
முதிர்வு காலம் பழைய வட்டி விகிதம் (எம்.சி.எல்.ஆர்.) புதிய வட்டி வகிதம் (எம்.சி.எல்.ஆர்.)
15 நாட்கள் 7.65 சதவீதம் 7.65 சதவீதம்
1 மாதம் 7.65 சதவீதம் 7.65 சதவீதம்
3 மாதம் 7.70 சதவீதம் 7.70 சதவீதம்
6 மாதம் 7.85 சதவீதம் 7.85 சதவீதம்
ஒரு ஆண்டு 8.00 சதவீதம் 7.90 சதவீதம்
2 ஆண்டுகள் 8.10 சதவீதம் 8.10 சதவீதம்
3 ஆண்டுகள் 8.20 சதவீதம் 8.20 சதவீதம்