பஞ்சாப் ராவண வாத கொண்டாட்டத்தின் போது ரயில் விபத்து: 50 பேர் உயிரிழப்பு?
பஞ்சாப் மாநிலத்தில் தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ரயில் மோதிய விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ரயில் மோதிய விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட மாநிலங்களில் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடைசி நாளான இன்று ராவண வதம் நிகழ்ச்சியை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் போது, தீமை அழிந்து நன்மை பெருகும் என்பதை வலியுறுத்தும் நிகழ்வாக ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதன் ஆகியோரின் உருவபொம்மைகளை தீயிட்டு எரிப்பது வழக்கம்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சௌரா பஜாரில் ராவண வதம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் கண்டு களித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த ரயில் மக்கள் கூட்டத்தில் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்தில் சிக்கி ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
#Punjab: Police says, “There are more than 50 casualties. We are evacuating people, injured taken to the hospital”, on accident in which several are feared dead in Choura Bazar near Amritsar pic.twitter.com/ITMeckyIN4
— ANI (@ANI) October 19, 2018
ராவண வதம் நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் தண்டவாளம் அருகே கூடி நின்று கண்டு களித்துக் கொண்டிருந்தனர். அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாகவும், அதனால் அலறியடித்துக் கொண்டு தண்டவாளத்தை கடந்து ஓடிய மக்கள் மீது அந்த வழியே வேகமாக வந்த ரயில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது.