தொலைத்தொடர்பு துறையிடம் ரூ.1,133 கோடி பாக்கியை கட்டிய ஜியோ நிறுவனம்….

 

தொலைத்தொடர்பு துறையிடம் ரூ.1,133 கோடி பாக்கியை கட்டிய ஜியோ நிறுவனம்….

முகேஷ் அம்பானியின் ஜியோ உள்பட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கடந்த 4 தினங்களில் மொத்தம் ரூ.4,500 கோடிக்கு மேல் அலைக்கற்றை தவணை தொகையை செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் அல்லது அலைக்கற்றை என்பது மனிதர்கள் உருவாக்குவது அல்ல. அது தண்ணீர் போல் ஒரு இயற்கை செல்வம். வளிமண்டலத்தின் வழியாக மின்காந்த அலைகள் பரவுகின்றன. மின்காந்த அலைகளின் வரம்பைதான்  அலைக்கற்றை அல்லது ஸ்பெக்ட்ரம் என்கிறோம். இந்த மின்காந்த அலைகள் மூலமாகத்தான் நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற ரேடியோ, தொலைக்காட்சி  மற்றும் செல்போன் இயங்குகின்றன. செல்போன் சேவைக்கு தேவைப்படும் அலைக்கற்றையை செல்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. இதற்காக நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு கட்டணம் பெறுகிறது.

செல்போன் டவர்

அலைக்கற்றைக்கான கட்டணத்தை தவணை முறையில் ஆண்டுதோறும் நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன. தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வருவதை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறுவனங்கள் அலைக்கற்றைக்காக கட்டணம் செலுத்துவதற்கான வருடாந்திர தவணையை 10 ஆண்டிலிருந்து 16 ஆண்டாக மத்திய அரசு உயர்த்தியது. இதனால் நிறுவனங்கள் நிம்மதி அடைந்தன.

வோடாபோன் ஐடியா

இந்நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஆண்டுக்கு அலைக்கற்றைக்கான தவணை தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த 21ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் தவணை தேதி முடிவடையதற்கு முன்  கடைசி 3 முதல் 4 தினங்களில் ஜியோ, வோடாபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையிடம் மொத்தம் ரூ.4,500 கோடிக்கு மேல் அலைக்கற்றை தவணை தொகையாக கட்டியுள்ளன. இதில், அதிகபட்சமாக வோடாபோன் ஐடியா நிறுவனம் ரூ.2,431 கோடி செலுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் ரூ.1,133 கோடியும், பார்தி ஏா்டெல் ரூ.977 கோடியும் செலுத்தியுள்ளதாக தகவல்.