சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் ’விக்ரம்’ வெற்றிகரமாக பிரிந்தது
சந்திரயான் – 2விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.
இந்நிலையில் இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள், தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து கொண்டு, மிக்ஞைகள் மூலம் சந்திரயான் -2 ல் இருந்து சலேண்டரை பிரித்தனர். இந்த பணி மதியம் 12.45 மணியளவில் தொடங்கி 1.15 மணி வரை நடைபெற்றது. இதன் மூலம் சந்திரயான் 2ன் சவாலான பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். லேண்டர் விக்ரம் தனியாக பிரிந்து தற்போது செயல்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 36 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள், அடுத்தடுத்த நாட்களில் இஸ்ரோ மேற்கொள்ளவுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்து செப்டம்பர் 7ஆம்தேதி நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் நடத்தப்படும். சந்திரயான் – 2 விண்கலத்திலிருந்து லேண்டர் விக்ரம் பிரிக்கப்பட்ட பிறகும், ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றி வரும்.